10,402 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அனுமதி

பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான, 10 ஆயிரத்து 402 பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு துறைகளில் காணப்படும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான, பின்னடைவுப் பணியிடங்கள், சிறப்பு ஆட் சேர்ப்பு முகாம் வழியே நிரப்பப்படும் என, கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டது.அதை செயல்படுத்த, தலைமைச் செயலகத் துறைகளிடம் இருந்து, தொகுதி வாரியாக உறுதி செய்யப்பட்டு பெறப்பட்ட எண்ணிக்கை அடிப்படையில், ஆதிதிராவிடருக்கு 8,173 இடங்கள், பழங்குடியினருக்கு 2,229 இடங்கள் என, மொத்தம் 10 ஆயிரத்து 402 இடங்கள் கண்டறியப்பட்டன.

இவற்றை உரிய வழிமுறைகளைப் பின்பற்றி நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதைத் தொடர்ந்து, இந்த இடங்களை நிரப்புவதற்கான வழிமுறைகளை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் மணிவாசன் வெளியிட்டுள்ளார்.