கல்வி உதவித்தொகை பெற மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு;
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசால் பட்டியலிடப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஐ.ஐ.டி.,- ஐ.ஐ.எம்.,- ஐ.ஐ.ஐ.டி.,- என்.ஐ.டி., மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆண்டு வருமானம் ரூ.2.00 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். விண்ணப்பப் படிவத்தை, www.cuddalore.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.மேலும், கடலுார் கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி கட்டணமின்றி விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 31ம் தேதிக்குள் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.மாணவ, மாணவியர்களிடமிருந்து பெறப்பட்ட புதுப்பித்தல் விண்ணப்பங்களை, வரும் 31ம் தேதிக்குள்ளும், புதியதாக வழங்கும் விண்ணப்பங்களை பிப்., 15 ம் தேதிக்குள்ளும், பரிந்துரை செய்து, இயக்குநர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை - 5 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, tngovtiitscholarship@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 044 -28551462 என்ற தொலைபேசி மூலம் தொடர் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
Post a Comment