தமிழ்‌ வழியில்‌ பயின்ற சான்றிதழைப் பதிவேற்றம் செய்வது எப்படி?- TNPSC விளக்கம்


ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகள்‌ தேர்வு உள்ளிட்ட தேர்வுகளில் தமிழ்‌ வழியில்‌ பயின்ற சான்றிதழைப் பதிவேற்றம் செய்வது குறித்து டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்துத் தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தின் செயலாளர்‌ பி. உமா மகேஸ்வரி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''தேர்வாணையத்தால்‌ கடந்த 03.01.2021 அன்று நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகள்‌ தேர்வு - 1 (தொகுதி 1)-ல்‌ அடங்கிய பணிகளுக்கான முதல்நிலைத்‌ தேர்வெழுதிய விண்ணப்பதாரர்களில்‌, தங்களது இணையவழி விண்ணப்பத்தில்‌, தமிழ்‌ வழியில்‌ பயின்றுள்ளதாகத் தெரிவித்துள்ள விண்ணப்பதாரர்கள்‌ மட்டும்‌, தாங்கள்‌ தமிழ்‌ வழியில்‌ பயின்ற சான்றிதழ்‌ (PSTM Certificate) பெறுவதற்கான படிவங்கள்‌, தேர்வாணைய இணையதளத்தில்‌ கீழ்க்காணும்‌ தரவுகளில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளன.

* நியமனம்‌ --> அறிவிக்கை --> விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள்‌

* படிவங்கள்‌ மற்றும்‌ பதிவிறக்கங்கள்‌ --> விண்ணப்பதாரர்‌ தொடர்பான படிவங்கள்‌ --> தமிழ்‌ வழியில்‌ படித்ததற்கான சான்றிதழ்‌ படிவம்‌ (வரிசை எண்‌. 6)

2. விண்ணப்பதாரர்கள்‌, இப்படிவங்களைப் பதிவிறக்கம்‌ செய்து பயன்படுத்திக்‌ கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதோடு, புதிய வடிவத்தில்‌ உள்ள தமிழ் வழியில்‌ பயின்ற சான்றிதழை (PSTM Certificate) உரிய அலுவலரிடமிருந்து பெற்று 100 KB முதல் 200 KB வரை ஸ்கேன் செய்து அரசு கேபிள்‌ டிவி நிறுவனம்‌ நடத்தும்‌ அரசு இ-சேவை மையங்கள்‌ மூலமாகப் பதிவேற்றம்‌ செய்ய வேண்டும்‌.


3. மேலும்‌, இது தொடர்பாக விண்ணப்பதாரர்களுக்குக் கூடுதல்‌ விளக்கம்‌ தேவைப்படின்‌, தேர்வாணையத்தின்‌ 1800 419 0958 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணிற்கு அனைத்து வேலை நாட்களிலும்‌ காலை 10 மணி முதல்‌ மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்''‌.இவ்வாறு டிஎன்பிஎஸ்சி  தெரிவித்துள்ளது.