பள்ளி கல்வித்துறைக்கு தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவை - முழுவிவரம்

 


* பள்ளிக்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் விதமாக இந்த வரவு - செலவுத்திட்டத்தில் மொத்தமாக 32,599.54 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

* தேசிய அடைவு ஆய்வு கணக்கெடுப்பின்படி , கற்றல் விளைவுகளின் அடிப்படையில் முதல் மூன்று மாநிலங்களுக்குள் தமிழ்நாடு கொண்டுவரப்படுவதை அரசு உறுதி செய்யும்.


* அனைத்து ஆசிரியர்களுக்கும் தொழில்நுட்ப வசதியுடன் கண்காணிக்கக்கூடிய மற்றும் ஆதாரங்கள் அடிப்படையிலான பயிற்சி வழங்க ஏதுவாக 413 கல்வி ஒன்றியங்களுக்கும் தலா 40 தொடுதிரை கையடக்க கணினிகள் ) Tablet ( 13.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.


* 2025 - ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் உள்ள வயதிற்குட்பட்ட அனைத்து மாணவர்களும் அந்தந்த வகுப்பு அளவில் படிக்கவும் , எழுதவும் , அடிப்படைக் கணக்குகளை செய்யவும் முடியும் என்பதை உறுதி செய்வதற்காக , அடிப்படை கல்வியறிவு மற்றும் கணித அறிவை உறுதி செய்ய ' எண்ணும் எழுத்தும் இயக்கம் ' , 66.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தீவிரமாக செயல்படுத்தப்படும்.


* அரசுப்பள்ளி மாணவர்கள் கணினித் திறன்களை இளம் வயதிலேயே பெறுவதை உறுதிசெய்ய 1,784 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 114.18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும் . மேலும் , 865 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 20.76 கோடி ரூபாயில் ஸ்மார்ட் வகுப்பறைகள் துவக்கப்படும்.


* அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி , கவின்திறன் மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை அளிக்கும் நோக்கத்துடன் , மாதிரிப் பள்ளிகள் அமைத்திட சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.


*  கொரோனா பெருந்தொற்றின் பரவல் ஏற்பட்டுள்ள கற்றல் இழப்புகளைக் குறைப்பதே இந்த அரசின் உடனடி முன்னுரிமையாக இருக்கும் . பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு விரைவாக செயல்படும் வகையில் அனைத்து ஆசிரியர்களுக்கும் தேவையான கொரோனா தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது மற்றும் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் . கற்றலில் ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்வதற்காக பள்ளி நேரங்களை தவிர பள்ளி வளாகங்களுக்கு வெளியே குறைதீர் கற்றல் வழங்குவதற்கான விரிவானத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.