தமிழ் வழிக் கல்வியில் படிப்பதன் மூலம் கிடைக்கும் அரசு வேலைவாய்ப்பு குறித்து தலைமை ஆசிரியர்கள் உரிய ஆலோசனை வழங்குவது அவசியம் - கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு-


 

தமிழ்நாடு அரசுப் பணி நியமனங்களில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% முன்னுரிமை வழங்கப்படும் என்று தமிழ் நாடு அரசு 2010 இல் சட்டம் இயற்றியுள்ளது. முதல் வகுப்பில் இருந்து தமிழ் வழியில் படித்தவர்கள் மட்டுமே இச் சட்டத்தின் மூலம் பயனடைவதற்கு ஏற்ப 2020 இல் சட்டத் திருத்தமும் செய்யப்பட்டுள்ளது.

எனவே, அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பில் மாணவர்களை ஆங்கில வழியில் சேர்க்கும் முன்பு பெற்றோர்களிடம் தமிழ் வழிக் கல்வியில் படிப்பதன் மூலம் கிடைக்கும் அரசு வேலைவாய்ப்பு குறித்து தலைமை ஆசிரியர்கள் உரிய ஆலோசனை வழங்குவது அவசியம்.

பெருப்பாலான அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு   அரசு பணி நியமனங்களில் முன்னுரிமை வழங்கும் சட்டம்  குறித்து அறியாமல் உள்ளனர். இதனால், எப்படியாவது மாணவர் எண்ணிக்கையைத் தக்க வைத்துக் கொண்டால் போதும் என்று ஆங்கில வழியில் எல்லாக் குழந்தைகளும் சேர்க்கப்படுகிறார்கள்.  

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியில்  சேர்க்கப்படும் ஏழை  மாணவர்கள் எல்லோரும், தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்கும் வசதியான  மாணவர்கள் அளவுக்கு படிக்க முடிவதில்லை. தனியார் பள்ளிகளில் பாடத்திற்கு ஒரு ஆசிரியர் இருக்கிறார்கள். ஆனால், ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்ட பல அரசுப்பள்ளிகளில் ஆங்கிலப் பாட ஆசிரியர் கூட இல்லை. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பலர் எழுத்தறிவு பெறாத நிலையில் உள்ளனர். இதனால் வீட்டில் இம் மாணவர்களுக்கு பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்கவும் வழி இல்லை.

இப்படிப்பட்ட சூழலில் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி என்பது பேரும்பாலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நன்மை அளிப்பதில்லை என்பதே நிதர்சனம்.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணி நியமனங்களில் முன்னுரிமை வழங்கும் சட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் ஏழை மாணவர்கள் பயனடைவதற்கு வழி செய்ய வேண்டும். ஆனால், இன்று பல அரசுத் தொடக்கப் பள்ளிகளில் தமிழ் வழி வகுப்புகளே இல்லாமல் போய்விட்டன.

அரசுப் பள்ளிகளில்  ஆங்கில வழிக்கல்வி என்ற நிலை இருப்பதால் தமிழ் வழிக் கல்வி படித்தவர்களுக்கு அரசுப் பணி நியமனங்களில் முன்னுரிமை வழங்கும் சட்டத்தினால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் பயனடைய முடியாத நிலை உள்ளது.

எனவே அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தமிழ் வழி வகுப்புகளில் கட்டாயமாக மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான அறிவிப்பாணையைத் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை வெளியிட வேண்டும்.

-சு.மூர்த்தி,

கல்வி மேம்பாட்டுக்  கூட்டமைப்பு-