தமிழகத்தில் காவல், தீயணைப்பு, சிறைத் துறையில் காலியாக உள்ள 11,813 காவலர் பணியிடங்களுக்கு ஜூலை 26 முதல் உடல்திறன் தேர்வு: சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு 



காவல், தீயணைப்பு மற்றும் சிறைத் துறையில் காலியாக உள்ள 11,813 இரண் டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான உடல்திறன் தேர்வுகள் வரும் 26-ம் தேதி முதல் நடத்தப்படும் என சீருடைப் பணி யாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இரண்டாம் நிலை காவ லர்கள், சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்புப் படை வீரர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி வெளியானது. இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த டிசம்பர் 13-ம் தேதி தமிழகம் முழுவதும் நடந்தது. தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 11 ஆயிரத்து 813 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்பட்டது.

இந்த தேர்வு மூலம் ஆயுதப்படை 2-ம் நிலை காவலர் பதவிக்கு 3 ஆயிரத்து 784 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆண்கள் 685 பேரும், பெண்கள் 3,099 பேரும் தேர்வு செய்யப்படுவர். தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் 2-ம் நிலை காவலர் பதவிக்கு 6 ஆயிரத்து 545 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த இடங்களுக்கு ஆண்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுகின்றனர்.

அதேபோல சிறைத் துறையில் 2-ம் நிலைக் காவலர் பதவிக்கு ஆண்கள் 107 பேர், பெண்கள் 12 பேர் என மொத்தம் 119 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். தீயணைப்புத் துறையில் தீயணைப்பாளர் பணியிடத்துக்கு 458 ஆண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆயுதப்படை மற்றும் சிறைத் துறையில் 3-ம் பாலினத் தவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

இந்தப் பணிகளுக்காக 5 லட்சத்து 50 ஆயிரத்து 314 பேர் விண்ணப்பித்து இருந் தனர். இதில் 4 லட்சத்து 91 ஆயிரம் பேர் எழுத்து தேர்வில் கலந்து கொண்டனர். எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விவரத்தை கடந்த பிப்ரவரி 19-ம் தேதி தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டது. 1:5 என்ற விகி தத்தில் ஆட்கள் தேர்வு செய்யப்பட் டுள்ளனர். அதாவது ஒரு பணியிடத்துக்கு 5 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் களுக்கு, அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடல் தகுதி தேர்வு மற்றும் உடல் திறன் போட்டி ஆகியவை கடந்த ஏப்ரல் 21-ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில நிர்வாக காரணங்களுக்காகவும், கரோனா ஊரடங்காலும் தேர்வு தேதி மாற்றப்பட்டது.

தற்போது, கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடல் தகுதித் தேர்வு மற்றும் உடல் திறன் போட்டிகள் வரும் 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 20 மையங்களில் நடத்தப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுக்கான அழைப்புக் கடித்தை www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

முதலில் சான்றிதழ் சரிபார்ப்பும், உடல் அளவு சோதனையும் நடைபெறும். இதில் தேர்வு பெறுபவர்களுக்கு 1,500 மீட்டர் தூரத்தை 7 நிமிடத்தில் கடக்கும் சோதனை நடக்கும். அதில் தேர்ச்சி பெறு பவர்களுக்கு கயிறு ஏறுதல், 400 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல் போட்டி நடத்தப்படும். இவை அனைத்திலும் வெற்றி பெறுபவர்களுக்கு மருத்துவ சோதனை நடத்தப்படும். அதிலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்.

எழுத்து தேர்வுக்கு 80 மதிப்பெண்களும், உடல் திறன் போட்டிகளுக்கு 15 மதிப் பெண்களும், என்சிசி, என்எஸ்எஸ் உள் ளிட்ட சான்றிதழ்களுக்கு 5 சிறப்பு மதிப் பெண்களும் வழங்கப்படும் என அறி விக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று பணியில் சேருபவர்களுக்கு ரூ.18,200 முதல் ரூ.52,900 வரை சம்பள விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

19,541 பேரை தேர்வு செய்ய திட்டம்?

கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காவலர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானபோது, 10 ஆயிரத்து 906 காவலர் பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டது. பின்னர் 11 ஆயிரத்து 813 பணியிடங்களாக அதிகரிக்கப்பட்டது.

ஆனால், தற்போது காலிப் பணியிடங்கள் மேலும் அதிகரித்துள்ளன. அத்துடன் காவல் துறையில் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கேற்ப 19 ஆயிரத்து 541 பேரை தேர்வு செய்ய இருப்பதாக காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கான அனுமதி அரசிடம் பெறப்பட்டதும், முறையாக அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.