மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் கிரேடு வழங்கல்  

எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில், மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில், கிரேடு வழங்குவது குறித்து, கர்நாடக தொடக்க கல்வி துறை வழிமுறைகள் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில் பெறும்,

90 - 100 வரை மதிப்பெண்ணுக்கு, 'ஏ பிளஸ் கிரேடு';

80 - 89 மதிப்பெண்ணுக்கு 'ஏ' கிரேடு;

60 - 79 மதிப்பெண்ணுக்கு 'பி' கிரேடு;

35 - 59 மதிப்பெண்ணுக்கு 'சி' கிரேடு வழங்கப்படும்.

மதிப்பெண் சான்றிதழில், கிரேடுகளுடன் மதிப்பெண்களும் குறிப்பிடப்படும்.ஒரே நாளில் மூன்று பாடங்களுக்கான தேர்வை ஒருங்கிணைத்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இரண்டு நாட்கள் தேர்வு நடத்தப்படும்.

அறிவியல், சமூக அறிவியல், கணிதம் ஆகிய மூன்று பாடங்கள் ஒரு தேர்வாகவும், மொழி பாடங்கள் மற்றொரு தேர்வாகவும் நடத்தப்படும்.காலை 10:30 மணி முதல் 1:30 மணி வரை, மூன்று மணி நேரம் தேர்வு எழுத நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பாடத்துக்கும், 40 மதிப்பெண்ணுக்கு வினாக்கள் கொடுக்கப்படும்.மாநிலம் முழுவதும், 6,247 தனியார் மாணவர்கள் உட்பட, 8 லட்சத்து 76 ஆயிரத்து 595 மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு எழுத உள்ளனர்.இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வினாத்தாள்களை, பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டுசேர்ப்பது இந்த காலகட்டத்தில் சிரமமாக இருக்கும். மேலும் 3,000 லிருந்து, 6,000 மையங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.ஒவ்வொரு அறையிலும், சமூக விலகலை கடைபிடித்து, 12 மாணவர்கள் வீதம், ஒரு மையத்தில் 100 பேர் எழுதும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஜூலை மூன்றாவது வாரம் தேர்வுக்கான ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.