அரசு ஊழியர் சஸ்பெண்ட் - கால படியை அதிகரித்து வழங்குமாறு கோர முடியாது: ஐகோர்ட் அதிரடி உத்தரவு 


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த 2018ம் ஆண்டு நடத்திய குரூப் 1 தேர்வில் முறைகேடுகள் செய்ததாக, தேர்வாணைய அதிகாரி காசிராம்குமார் என்பவரை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவருக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளது.


இந்நிலையில், காசிராம்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.இந்த மனுவுக்கு பதிலளித்த அரசுப் பணியாளர் தேர்வாணையம், மனுதாரரின் பணி இடைநீக்க உத்தரவு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்யப்படுகிறது. வழக்கு முடியும்வரை அவரை மீண்டும் பணியில் சேர்க்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், பணி இடைநீக்கம் செய்யப்பட்டு ஆறு மாதங்கள் கடந்த பின், இடைநீக்க காலத்துக்கான படியை, 75 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று உரிமைகோர முடியாது.


இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும். மனுதாரர் காசிராம்குமாருக்கு எதிரான துறைரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை அரசு பணிகள் தேர்வாணையம் விரைந்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும். விசாரணைக்கு மனுதாரர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.