12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் அறிவிப்பால் தனித்தேர்வர்கள் கடும் பாதிப்பு.

 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தனித்தேர்வர்களுக்கும்  12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு உள்ளதா? அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 கல்வியாளர்கள் தலைமையில் பிளஸ் டூ மதிப்பெண் எவ்வாறு வழங்குவது குறித்து குழு அமைத்து மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுத தமிழ்நாடு முழுவதும் சுமார் 60,000 பேர் தேர்வு கட்டணம் செலுத்தி தேர்வுத் துறை மூலம் விண்ணப்பித்துள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 ஆனால் இவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்ற அறிவிப்பு தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை தற்போது வரை தெரியப்படுத்தவில்லை என அவர்கள் தெரிவித்து உள்ளார்கள். 

இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர் கூறுவதாவது: தனித்தேர்வர்கள் என்றால் தேர்வில் தோல்வியுற்றவர்கள் மட்டுமல்ல பொதுத் தேர்வின் போது பல்வேறு காரணங்களால் தேர்வு எழுத முடியாத சூழ்நிலையில் உள்ளவர்கள் பள்ளி மாணவர்களும் தனித்தேர்வர்கள் கீழ் வருவார்கள் .

மேலும் வேலைக்குச் சென்றுகொண்டே தனியார் பயிற்சி நிறுவனங்கள் மூலம் கட்டணம் செலுத்தி பலபேர் பள்ளிப்படிப்பைத் தொடர்ந்து வருகின்றனர். குறிப்பாக இவர்கள் தங்கள் குடும்பத்தை கவனித்துக் கொண்டும் வேலை செய்து கொண்டும் தனது படிப்பைத் தொடர்ந்து தொடர்கின்றனர். தனித்தேர்வர்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தேர்வு  நடத்தப்பட்ட நிலையில் அக்டோபர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியானது இதில் பல பேர் பல்வேறு பாடப் பிரிவுகள் தோல்வியடைந்தனர். 

தற்பொழுது 2021 ஆம் ஆண்டுக்கான பொது தேர்வு நடத்தப்படாததால் அவர்கள் எவ்வாறு தங்களது உயர்கல்வியை தொடர முடியும் என்ற கேள்வி எழுப்பியுள்ளார்கள். உடனடியாக பள்ளி கல்வி அமைச்சர் தனித்தேர்வர்கள் விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்னவென்று தெரிவிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக அந்த ஆசிரியர் தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே முந்தைய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்துள்ள நிலையில் தனித்தேர்வர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு  எழுத முடியாத சூழ்நிலையில் உள்ளார்கள் .எனவே பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து விரைவில் ஒரு நல்ல பதில் அளிக்குமாறு பள்ளி கல்வி துறைக்கு தனி தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.