தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வங்கி கணக்குகள் சேகரிப்பு.!

 


குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவதற்காக, ரேஷன் கார்டுதாரர்களிடம் இருந்து, வங்கி கணக்கு விபரங்களை சேகரிக்க, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை முடிவு செய்துள்ளது.


தமிழக சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., சார்பில், 'குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம்தோறும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும்' என, வாக்குறுதி அளிக்கப் பட்டது.

கோரிக்கைகள்


முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், தி.மு.க., வாக்குறுதியாக அறிவித்த அரிசி கார்டுதாரர்களுக்கு, கொரோனா நிவாரண தொகையான 4,000 ரூபாய் வழங்கும் திட்டத்தில் முதல் கையெழுத்திட்டார்.


அத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில், மே மாதம் முதல் தவணையான தலா 2,000 ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், இரண்டாவது தவணை இம்மாதம் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல், மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் வாக்குறுதியை விரைந்து நிறைவேற்றுமாறு, அரசுக்கு பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வருகின்றன. இந்த தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது.சென்னை தலைமை செயலகத்தில் உள்ள, கூட்டுறவு மற்றும் உணவு துறை செயலர் அலுவலகத்தில், சமீபத்தில் பொது வினியோக திட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. அதில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், உணவு வழங்கல் ஆணையர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

எதிர்பார்ப்பு


கூட்டத்தில், ரேஷன் கார்டுதாரர்களிடம் இருந்து அவர்களின் வங்கி கணக்கு விபரங்களை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 'ஆதார்' எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு விபரங்களை சேகரிக்கவும்; வங்கி கணக்கு இல்லாதவர்களை, விரைந்து கணக்கு துவக்க ஊக்கமளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.கார்டுதாரர்களின் வங்கி விபரங்களை சமர்ப்பிக்கும் பணி, உணவு வழங்கல் துறை ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதனால், வங்கி கணக்கு சேகரிக்கும் பணி, விரைந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.