பாஸ்டேக் அட்டை:தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரிக்கை.


சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த, வாகனங்கள் காத்திருப்பதை தவிர்க்க, ரொக்க கட்டணத்திற்கு பதிலாக, மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும், 'பாஸ்டேக்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பாஸ்டேக் மின்னணு அட்டைகளை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், www.ihmcl.co.in என்ற, இணையதளம் வாயிலாகவும், 'my Fastag' மொபைல் ஆப் வாயிலாகவும் வழங்கி வருகிறது. பல்வேறு வங்கிகள், தொலைதொடர்பு நிறுவனங்கள், பண வங்கிகள் வாயிலாகவும், பாஸ்டேக் அட்டைகள் வழங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.


இதற்கென கார் உள்ளிட்ட, இலகு ரக வாகனங்களுக்கு குறைந்தபட்சம், 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பாஸ்டேக் மின்னணு அட்டையை, வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டிக்கொண்டால், சுங்கச்சாவடிகளை கடக்கும் போது, அங்குள்ள கருவி வாயிலாக, சுங்க கட்டணம், வங்கி கணக்கில் இருந்து கழித்துக் கொள்ளப்படும். இது தொடர்பான குறுஞ்செய்தி, பதிவு செய்யப்பட்ட மொபைல்போன் எண்ணுக்கு வந்து சேரும். இந்நிலையில், 'ஆன்லைன்' வாயிலாக, பாஸ்டேக் அட்டைகள் வழங்கப்படுவதாக, அதிகளவில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இதை நம்பி பலரும், ஆன்லைனில் பாஸ்டேக் வாங்க, பணம் கட்டி ஏமாந்து வருகின்றனர்.


இதுதொடர்பாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு புகார்கள் வருகின்றன. இதையடுத்து, 'ஆன்லைன் வாயிலாக, யாரும் பணம் கட்டி ஏமாற வேண்டாம்' என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரித்துள்ளது. இதுபோன்ற முறைகேடுகள் தொடர்பான விபரங்களை, ஆணையத்தின், '1033' என்ற, அவசர கட்டுப்பாட்டு அறைக்கும், etc.nodal@ihmcl.com. என்ற, மின்னஞ்சல் முகவரியிலும் தெரிவிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.