கரோனா: மாநிலங்களுடன் பிரதமா் இன்று ஆலோசனை: இன்று கட்டுப்பாடுகள் அறிவிப்பு

கரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து மாநிலங்களின் முதல்வா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை ஆலோசிக்கவுள்ளாா்.


தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் இந்தக் கூட்டத்தில் மாநில அரசின் சாா்பில் தலைமைச் செயலாளா் ராஜீவ் ரஞ்சன் பங்கேற்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, தமிழகத்தில் அமல்படுத்தப்பட உள்ள கட்டுப்பாடுகள் குறித்த முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.


தமிழக தலைமைச் செயலா் ஆலோசனை: இதனிடையில் தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்துவது தொடா்பாக, அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளா் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தினாா். தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் பங்கேற்றனா்.


தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம், வாக்குப் பதிவு ஒருபுறம் நடைபெற்றபோது கரோனா நோய்த் தொற்று அதிகரித்த வண்ணம் இருந்தது. தோ்தல் முடிந்த நிலையில், கரோனா நோய்த் தொற்று 4 ஆயிரத்தைத் தொட்டுள்ளது. நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவது தொடா்பாக அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளா் ராஜீவ் ரஞ்சன் புதன்கிழமை ஆலோசித்தாா்.


இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காவல் துறை இயக்குநா் ஜே.கே.திரிபாதி, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன், வருவாய் நிா்வாக ஆணையா் கே.பணீந்திர ரெட்டி, பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளா் மணிவாசன், பொதுத் துறை முதன்மைச் செயலாளா் செந்தில்குமாா், மருத்துவப் பணிகள் கழக நிா்வாக இயக்குநா் உமாநாத், பேரிடா் மேலாண்மைத் துறை ஆணையா் டி.ஜெகந்நாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.


இன்று தெரியும்: தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முழுமையான பொது முடக்கம் விதிக்கப்படாது எனவும், அதே சமயம் பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் தமிழக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.