திருமணத்தின்போது ஆசிரியரான தந்தைக்கு மறக்க முடியாத நினைவுப் பரிசை வழங்கிய மகன்!

தன்னுடைய திருமணத்தின் போது தந்தைக்கு மறக்க முடியாத நினைவுப் பரிசாக, அவர் பணியாற்றும் பள்ளியில் மரக் கன்றுகளை நட்டு மகன் ஒருவர் அசத்தியுள்ளார்.

அரியலூர் மாவட்டம் நல்லாம் பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து அங்கேயே ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் பால கிருஷ்ணன். தன்னுடைய பள்ளியைச் சுற்றிலும் மரங்களை நட்டு, அந்த இடத்தைச் சோலை வனமாக்க ஆசைப்பட்டார் பால கிருஷ்ணன். இதற்கிடையே அவரின் மகன் மணிபாரதிக்கும் பத்மப்ரியா என்பவருக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த கையோடு தன் தந்தை பணியாற்றி வரும் பள்ளிக்கு வந்த மணிபாரதி மற்றும் பத்மப்ரியா தம்பதி, பள்ளியைச் சுற்றிலும் 200-க்கும் மேற்பட்ட மரக் கன்றுகளை நட்டனர்.

மா, பலா, கொய்யா, சப்போட்டா என பழக் கன்றுகளையும் பனை, ஆலம், வேம்பு உள்ளிட்ட நாட்டு மரக் கன்றுகளையும் மணிபாரதி தம்பதியினர் நட்டு, தண்ணீர் ஊற்றினர். கன்றுகளை நடுவதோடு மட்டுமல்லாமல் அவை வளர்ந்து மரமாகும் வரை தொடர்ந்து பராமரித்துக் கொள்வோம் என்றும் மணமக்கள் உறுதி எடுத்துக் கொண்டனர். இது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது