சி.பி.எஸ்.இ தேர்வில் சீர்திருத்தம்: பட்ஜெட்டில் கூறுவது என்ன?

  சி.பி.எஸ்.இ தேர்வில் சீர்திருத்தம்: பட்ஜெட்டில் கூறுவது என்ன? நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் கல்வித் துறையைப் பொறுத்தவரை, 2020 வருட தேசிய கல்வி கொள்கைக்கு (என்இபி) முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அடுத்த, ஐந்தாண்டு காலத்தில் தேசிய ஆராய்ச்சி பவுண்டேசனுக்கு ரூ.50 ஆயிரம் கோடியிலான திட்டம் அறிவிக்கப்பட்டது.

 மேலும், தேசிய கல்விக் கொள்கையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கும் வகையில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான பள்ளிகள் தர ரீதியாக வலுப்படுத்தப்படும். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் பள்ளிகள், மாநில அரசுகள் ஆகியவற்றுடன் இணைந்து 100 புதிய சைனிக் பள்ளிகள் துவங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

    சிபிஎஸ்இ வாரிய தேர்வுகள்:

திங்களன்று பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன்,“2022-23 கல்வி ஆண்டில் இருந்து படிப்படியாக சிபிஎஸ்இ வாரிய தேர்வில் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படும். மாணவர்கள் கொடுக்கப்பட்ட பத்தியை வாசித்து கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

அறிவை மட்டும் வளர்க்காமல்,வாசிப்பு, புரிதல், கற்றல் தன்மை போன்ற 21-ம் நூற்றாண்டு திறமைகளுக்கு ஏற்ற வகையில் மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில் கேள்விகள் இருக்கும் என்று தெரிவித்தார். சீர்திருத்தங்களில், வாரியத் தேர்வுகளில் கேள்வி முறை அடிப்படையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. உதாரணமாக, கடந்த ஆண்டு வாரியத் தேர்வுகளில் பலதேர்வுக் கேள்விககளை (Multiple Choice Question) வாரியம் அறிமுகப்படுத்தியது.

ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய கேள்விகளின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, வரும் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12-ம் வகுப்பிற்கான சி பி எஸ் இ தேர்வு அட்டவணையை மத்திய கல்வியமைச்சர் முன்னதாக அறிவித்தார். பத்தாம் வகுப்பு தேர்வுகள் வரும் மே மாதம் 4-ம் தேதி தொடங்கி, ஜூன் மாதம் 7-ம் தேதி வரை நடைபெறும் . 12-ம் வகுப்பு தேர்வுகள் மே மாதம் 4-ம் தேதி தொடங்கி, ஜூன் 11-ம் தேதி வரை நடைபெறும் என்று அமைச்சர் தெரிவித்தார்.