பிப்ரவரி 23ல் தொடங்குகிறது ஜேஇஇ மெயின் 2021 - விதிமுறைகள் என்னென்ன? பிப்ரவரி 23 தொடங்கும் ஜேஇஇ மெயின் 2021 தேர்வுகளுக்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஐஐடி மற்றும் என்ஐடி உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர ஆண்டுதோறும் நடத்தப்படும் ஜேஇஇ முதன்மைத் தேர்வு இந்த ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தேர்வுக்கான மாணவர்கள் அனுமதி அட்டையை என்டிஏ ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. இதை jeemain.nta.nic.in. என்ற இணையதளத்திலிருந்து டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

இது கொரோனா சமயம் என்பதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நலனைக் கருத்தில்கொண்டு ,அந்த அனுமதி அட்டையில் மாணவர்கள் சுயவிவர பகுதி ஒன்றையும் வைத்துள்ளது. அதில் மாணவர்கள் தங்களுடைய உடல்நலம் மற்றும் சமீபத்தில் பயணம்சென்ற இடங்கள் என அனைத்தையும் குறிப்பிட வேண்டும்.

கடந்த சில நாட்களாக National Test Abhyas என்ற மொபைல் செயலிமூலம் mock test என்று சொல்லக்கூடிய மாதிரி தேர்வுகளிலும் மாணவர்கள் பங்குபெற்றுவருகின்றனர். ஜேஇஇ மாதிரி தேர்வு வினாத்தாள்கள் தேவைப்படுவோர் nta.ac.in என்ற லிங்கைப் பயன்படுத்தவும்.

செய்யக்கூடியவை

1. அனுமதி அட்டையில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்குள் தேர்வு மையத்திற்கு சென்றுவிடவேண்டும். முடிந்தால் ஒருநாளைக்கு முன்பே சென்று தேர்வுமையத்தை பார்த்துவிட்டு வருவது நல்லது.

2. புகைப்படத்துடன் கூடிய ஐடி கார்டுடன், அனுமதி அட்டையையும் கட்டாயம் கொண்டுசெல்ல வேண்டும்.

3. சுயவிவரப் பகுதியை நிரப்பி, புகைப்படத்தை ஒட்டி, இடது பெருவிரல் ரேகைப்பதிவை வைக்கவேண்டும். ஆனால் கையெழுத்திடக்கூடாது. தேர்வு அறைக்குச் சென்றபிறகு தேர்வறை கண்காணிப்பாளர் முன்பு வைத்துத்தான் கையெழுத்திட வேண்டும்.

4. மாஸ்க், கையுறை, ட்ரான்ஸ்பரண்ட் பாட்டிலில் சானிடைசர்(50மி.லி) கொண்டுசெல்ல வேண்டும்.

5. தண்ணீர் வேண்டுமானால் ட்ரான்ஸ்பரண்ட் பாட்டிலில் கொண்டுசெல்லலாம். அதேபோல் ட்ரான்ஸ்பரண்ட் பால்பாயிண்ட் பேனாவையும் உடன் கொண்டுசெல்லவும்.

6. தேர்வுநாளின் வெப்பநிலையை கருத்தில்கொண்டு தளர்வான வெளிர்நிற உடைகளை அணிந்துசெல்லவும்.

செய்யக்கூடாதவை:

1. செல்போன், ஹேண்ட்பேக் போன்றவற்றிற்கு அனுமதி கிடையாது. அவற்றின் பாதுகாப்புக்கு அதிகாரிகள் உத்தரவாதம் கொடுக்கமாட்டார்கள்.

2. தலையில் தொப்பி அல்லது துப்பட்டா அணிந்திருந்தல் அனுமதிக்கப்பட மாட்டாது(முன்கூட்டியே அனுமதி பெற்றவர்கள் விதிவிலக்கு). மதரீதியாக காரா அல்லது கிர்பான் அணிந்திருப்பவர்கள் 1 1/2 மணிநேரத்திற்கு முன்பாகவே தேர்வுமையத்திற்கு சென்று அதிகாரிகளிடம் தெரிவிக்கவேண்டும்.

3. கைக்கடிகாரங்களுக்கு அனுமதி இல்லை.

4. அணிகலன்கள் மற்றும் ஆபரணங்களுக்கு அனுமதி கிடையாது.

5. சன்க்ளாஸ் அல்லது கூலிங் க்ளாஸ் அணிய அனுமதி கிடையாது.

6. ஹீல்ஸ் வைத்த செருப்புகள் மற்றும் பெரிய பட்டன்கள் வைத்த உடைகளுக்கு அனுமதி கிடையாது.