10 மரக்கன்றுகளை நட்டால் ரூ.25,000 தள்ளுபடி.. பைக் நிறுவனம் அதிரடி சலுகை !

நவீனமயமான காலக்கட்டத்தில் பல்வேறு மனித தேவைகளுக்காக மரங்களை அழிக்கும் வேதனையான சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. மேலும் சமூக விரோத கும்பலால் காடுகளை அழிக்கும் நிகழ்வும் நடக்கிறது.

இதனால் நாம் அல்லது நமது எதிர்கால சந்ததியினர் எதிர்கொள்ள இருக்கும் பாதிப்புகளை அவர்கள் மனதில் கொள்ளவில்லை. மரங்களினால், மனிதனுக்கு கிடைக்கும் பயன்கள் எண்ணிக்கையில் அடங்காது. சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒரு தீர்பு மரங்கள் வளர்ப்பு தான்.

இந்நிலையில், புதிய எலக்ட்ரிக் பைக் நிறுவனம், மரக்கன்றுகளை நட்டால், புதிய பைக் வாங்க ரூ.25,000 தள்ளுபடி என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்நிறுவனத்தின் இந்த அறிவிப்பு சமூக ஆர்வலர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

கோவையைச் சேர்ந்த ஸ்ரீவரு மோட்டார்ஸ் என்ற நிறுவனம் தனது அதிவேக எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. க்ளாஸ், க்ராண்ட் மற்றும் எலைட் என்ற மூன்று விதமான வகைகளில் சந்தைப்படுத்தப்படவுள்ளது. இந்த பைக் மார்ச் மாதம் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், க்ராண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.1.99 லட்சமாகவும், எலைட் வேரியண்ட்டின் விலை ரூ.2.99 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பத்து மரக்கன்றுகளை வெவ்வேறு பகுதியில் நட்டு நிறுவனத்திற்கு தெரியப்படுத்தினால், இந்த புதிய எலக்ட்ரிக் பைக் வாங்க ரு. 25 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் எலக்ட்ரிக் பைக்கிற்கு ரூ.5,200 முதல் மாத தவணை திட்டமும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த பைக்குகளை ஒருமுறை சார்ஜ் செய்தால் 126 கி.மீ தூரம் வரையிலும், எலைட் வேரியண்ட்டின் பேட்டரி 225 கி.மீ தூரம் வரையிலும் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது