திறந்தநிலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்!தகவல்கள் இதோ.

.தமிழ்நாட்டில் திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களுக்கு தமிழகத்தில் 8 மண்டலங்களிலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் திரு பார்த்தசாரதி அவர்கள் தெரிவித்துள்ளார் .

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் சென்னை மண்டல மையம் மற்றும் உறுப்பு சமுதாயக் கல்லூரியின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைப்பாளருக்கான புத்தாக்க பயிற்சி சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் பேசிய தகவல்கள் இதோ உங்களுக்காக :

தமிழகத்தில் தற்போது 91 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கற்றல் வள மையங்கள்  தேர்வு மையங்களாக செயல்பட்டு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இடம் கிடைக்காத மாணவர்கள் இப்போது அதே கல்லூரி மூலமாக தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் சேரலாம் என்றும் ,அவர்களுக்கான வகுப்புகள் அதே கல்லூரியில் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கற்றல் மையங்களில் தற்போது வரை சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட  மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் சேர மாணவர்களின் விவரங்களை பல்கலைக்கழக மானியக்குழுவின் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது. எனவே டிசம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் அவர்களுடைய விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 கடந்த ஆண்டு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டதாகவும். இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .கொரோனா தற்போது குறைந்து வருவதால் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி ஜனவரி மாதம் 8 மண்டலங்களிலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் எனவும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் அவர்கள் தெரிவித்துள்ளார்.