மாணவர்கள் அதிகம் உள்ள அரசு பள்ளிகளில் தேவைக்கேற்ப ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை முடிவு! 

 தமிழகத்தின் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில்  கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் பள்ளிகளைத் தவிர கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து பள்ளிகளையும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும் நேரடி வகுப்புகளை நடத்த வேண்டிய தேவை உள்ளதாக தனியார் பள்ளிகள் தற்பொழுது வலியுறுத்தி வருவதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

இது பற்றி தமிழக பள்ளிக் கல்வி அதிகாரிகள் விரிவான ஆலோசனை நடத்தி வருவதாகவும் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவல் தடுப்பு விதிகள் உள்ளதாக சுகாதாரத் துறையின் அனுமதி பெற்றபின் ஜனவரியில் பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதற்கிடையில்  கொரோனா ஊரடங்கால் வருமானம் குறைந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் இருந்து  அரசு பள்ளிகளில் சேர்த்தனர். இதனால் எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதாவது தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்கள் மட்டும் 5 லட்சத்து 25 ஆயிரம் மாணவர்கள் உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் அதிகம் உள்ள அரசு பள்ளிகளில் தேவையின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சேகரிக்க இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கு இது குறித்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. காலிப்பணியிடங்களில் வந்ததும் உபரியாக உள்ள ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில் இருந்து தேவைப்படும் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் இது போன்ற பல தகவல்களை தெரிந்து கொள்ள தமிழ்ச் செய்திவளை தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.