CA தேர்வுக்கான விண்ணப்ப பதிவு மீண்டும் தொடக்கம் – ICAI வாரியம் அறிவிப்பு! 



2021ம் ஆண்டுக்கான CA இடைநிலை மற்றும் இறுதி தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று ICAI வாரியம் அறிவித்துள்ளது.


CA தேர்வுகள்: பட்டயக் கணக்காளராக (CA) விரும்பும் நபர்கள் ICAI நிறுவனம் நடத்தும் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசிடம் இருந்து சான்றிதழ் வழங்கப்படும். இவர்கள் மத்திய அரசால் பதிவு செய்யப்பட்ட பட்டயக் கணக்காளராக (CA) அறிவிக்கப்படுவார்கள். பொதுவாக ஆண்டுக்கு இரண்டு முறை CA தேர்வுகள் நடத்தப்படும். நடப்பு ஆண்டு மே மாத தேர்வுகள் கொரோனா தொற்று பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


முன்னதாக இடைநிலைத் தேர்வுகள் மே 22ம் தேதியும், இறுதி தேர்வுகள் மே 21ம் தேதியும் தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. தேர்வு பற்றிய திருத்தப்பட்ட அட்டவணை தேர்வுக்கு 25 நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுவதாக ICAI அறிவித்துள்ளது. அதன்படி, இடைநிலை மற்றும் இறுதி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மே 4ம் தேதி காலை 10 மணி முதல் மே 6ம் தேதி இரவு 11:59 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ICAI ன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், தாமதக் கட்டணம் ரூ.600 செலுத்த வேண்டும். இது தொடர்பாக ICAI, மாணவர்களின் நலனுக்காகவும், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை குறைக்கவும் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தனது அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது.