ஜூன் 8 முதல் இரண்டாம் நிலை மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிகளுக்கான நேர்காணல் 


தமிழ்நாடு போக்குவரத்து துறையில் இரண்டாம் நிலை மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிகளுக்கான நேர்காணல் வரும் ஜூன் 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தால் 2013-18ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு போக்குவரத்தில் இரண்டாம் நிலை மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு கடந்த 2018ல் நடத்தப்பட்டது. இதில் 1,328 பேர் கலந்துகொண்டனர்.

தேர்வில் கலந்துகொண்டவர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீடு விதி மற்றும் அப்பதவிக்காக வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட 226 பேருக்கு வரும் ஜூன் 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை நேர்காணல் நடைபெறும். மேலும், தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் www.tnpsc.gov.in என்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.