2011க்கு முன் கட்டப்பட்ட கல்வி நிறுவன கட்டிட அனுமதிக்கு ஏப்.4 கடந்த 2011க்கு முன்னர் கட்டப்பட்ட கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதி பெற மார்ச் 22ம் தேதி முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக நகர் ஊரமைப்பு துறை இயக்குனர் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 1.1.2011க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இந்த துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த 2018 ஜூன் 14ம் தேதி வெளியிடப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் நிகழ்நிலை (ஆன்லைனில்) கடந்த 2018 ஜூன் 14 முதல்  2018 நவம்பர் 13ம் தேதி வரை மூன்று மாத காலத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு இசைவு வழங்குவதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி கடந்த பிப்ரவரி 10ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி இத்திட்டத்தின் கீழ், முன்பே விண்ணப்பித்தவர்கள் உரிய விவரங்களை சமர்ப்பித்து இசைவு பெற சம்பந்தப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகங்களை அணுகலாம்.  


மேலும், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மேலும் ஒரு சந்தர்ப்பம் வழங்கும் விதமாக விண்ணப்பம் சமர்ப்பிக்க இரு வாரங்களுக்கு கால அவகாசம் வழங்கியும் நீதிமன்ற தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பின்படி இரு வார காலத்திற்குள் விண்ணப்பங்களை பெறுவதற்கு மற்றும் இது சம்பந்தமான செய்தி வெளியிடுவதற்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இந்திய தேர்தல் ஆணையத்தால் ஆட்சேபணையின்மை வழங்கப்பட்டுள்ளது. எனவே,   இத்திட்டத்தின் கீழ், இசைவு பெற விரும்புவோர் மார்ச் 22ம் தேதி முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை இருவார காலத்திற்குள் www.tn.gov.in/tcp என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இது ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் அரிய வாய்ப்பு என்பதால் இதனை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது