முதுநிலை ஆசிரியர் பணி எப்போது கிடைக்கும்?

 ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய, போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, முதுநிலை ஆசிரியர் பணி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு உள்ளது.


முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தோருக்கான அமைப்பு சார்பில், நிர்வாகி வன்னிமுத்து தலைமையில், சென்னையில் உண்ணாவிரத போராட்டம், நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஏராளமான பட்டதாரிகள் பங்கேற்றனர். தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் இளமாறன், போராட்டத்தை துவக்கி வைத்தார்.


அவர் கூறியதாவது:அரசு பள்ளிகளில் காலியாக இருந்த, 2,144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் வழியாக, 2019 செப்டம்பரில் போட்டி தேர்வு நடத்தப்பட்டது. இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட்டு, 2017- - 18 மற்றும் 2018- - 19ம் ஆண்டு காலியிடங்களுக்கு மட்டும், பணி நியமனம் வழங்கப்பட்டது. 2019- - 20ம் ஆண்டுக்கான இடங்கள் நிரப்பப்படவில்லை.


இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள், பள்ளி கல்வி செயலர், இயக்குனர் உள்ளிட்டோரிடம், பல முறை மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிதாக, 2,098 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு, போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு முன், ஏற்கனவே சான்றிதழ் சரிபார்க்கப் பட்டவர்களுக்கு பணி நியமனம் வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.