தணிக்கை தொடர்பாக ஆசிரியர்களுக்கான சில ஆலோசனைகள்!

 நமது தமிழ் செய்திவளை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் இதோ,

 வட்டாரக் கல்வி அலுவலகங்களில் மண்டல தணிக்கைத் துறை அலுவலர்களால், ஆசிரியர்களின் பணிப் பதிவேடு தொடர்பான தணிக்கை நடைபெறும் போது, தணிக்கை அலுவலர்களால் பொதுவாக சுட்டிக் காட்டப் படும் சிறு சிறு குறைபாடுகள்:


1. ஒரு ஆசிரியர் அரசுப் பணிக்கு வரும் முன்னரே, கூடுதல் கல்வித் தகுதி பெற்றிருந்தால், பணியில் சேரும் முன்னரே உயர் கல்வி பெற்றுள்ளார் என்ற பதிவை வட்டாரக் கல்வி அலுவலருக்கு விண்ணப்பித்து பணிப் பதிவேட்டில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.



2. உயர் கல்வி பயில்வதற்கான முன் அனுமதி ஆணை வழங்கப் படும் விவரம், 2012 ஆம் ஆண்டிற்கு பின்பு தான், பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப் படுகிறது. அதற்கு முன்னர் ஆணை மட்டும் தான், வழங்கப் பட்டது. ஆனால் தற்போது தணிக்கைத் துறை அலுவலர்கள், பணி நியமன நாள் முதல் இன்று வரை, பணிப் பதிவேட்டில் பதிவு செய்துள்ள அனைத்து கூடுதல் கல்வித் தகுதிகளுக்கும் முன் அனுமதி அல்லது பின்னேற்பு பதிவு செய்வது கட்டாயம் என வலியுறுத்துகின்றர். ஊக்க ஊதியம் பெற்றிருந்தாலும், பெறாவிட்டாலும் முன் அனுமதி / பின்னேற்பு ஆணையை வட்டாரக் கல்வி அலுவலரிடம் காண்பித்து, பணிப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.


3. 10 ஆம் வகுப்பு முதல், நாம் பணிப் பதிவேட்டில் பதிவு செய்திருக்கும் அனைத்து கல்வித் தகுதிகளுக்கும் உண்மைத் தன்மைச் சான்றினைப் பெற்று பணிப் பதிவேட்டில் பதிவு செய்திருக்க வேண்டும். அதன் நகலும் ஆசிரியர் கைவசம் வைத்திருக்க வேண்டும்.



4. பணிப் பதிவேட்டில், தற்காலிக தேர்ச்சி சான்று மட்டும் பதிவு செய்திருத்தல் கூடாது. அப்படிப்பிற்கான பட்டச் சான்றை பணிப் பதிவேட்டில் பதிவு செய்திருக்க வேண்டும்.


5. இதற்கு முந்தைய தணிக்கையின் போது, ஏதேனும் குறைபாடுகள் சுட்டிக் காட்டப் பட்டிருந்தால், அவற்றை நிவர்த்தி செய்திருக்க வேண்டும்.



6. பணியிட மாறுதல் ஏதேனும் பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப் படாமல் விடுபட்டிருந்தால், அவற்றை உரிய ஆவணங்களின் அடிப்படையில் விடுதல் பதிவாக பதிவு செய்ய விண்ணப்பித்து, பதிவு செய்ய வேண்டும்.




7. CL, RH தவிர பிற அனைத்து விடுப்பு வகைகள், ஈட்டிய விடுப்பு பணப் பயன், ஈட்டிய விடுப்பு கையிருப்பு, பணிக் காலம் சரி பார்ப்பு இவற்றில் ஏதேனும் விடுபட்டிருந்தால் சரி செய்து கொள்ள வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்ட காலம், ஊதியமில்லா விடுப்பாக பதிவு செய்யப் பட்டிருக்க வேண்டும். கலந்து கொண்ட போராட்ட நாட்களுக்கு ஏற்ப, ஆண்டு ஊதிய உயர்வு தள்ளி போயிருக்க வேண்டும்.



8. குடும்ப உறுப்பினர் விவரம், வாரிசு நியமனம் இவற்றில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் உடனே விண்ணப்பித்து சரி செய்து கொள்வது நல்லது.



9. பி.எட். கற்பித்தல் பயிற்சிக்காக, அரைச் சம்பள விடுப்பு எடுத்திருந்தால், அதை ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு கணக்கீட்டிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.


10. பணிப் பதி வேட்டின் நகல் தங்களிடம் இருந்தால், அனைத்து பதிவுகளும் சரியாக உள்ளதா? என்பதை சரிபார்த்துக் கொள்வது நல்லது.