தமிழகத்தில் +2 பொதுத்தேர்வை ஜூன் மாதம் நடத்த வேண்டும்.! தமிழக அரசுக்கு அவசர கோரிக்கை.!

 2020- 2021ம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு ஆனது மே 3 அன்று தொடங்கி 21. 5. 2021 அன்று முடிவடையும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான தேர்வு கால அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு ஆரம்பித்து 1.15 வரை நடைபெறும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், மே 3-ந்தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் செயல் என்று, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

"பொதுத்தேர்வுக்கு இடையில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இரண்டு வாரங்கள் கல்விப் பணி பாதிக்கும். இடையில் சனி, ஞாயிறு போன்ற அரசு விடுமுறை நாட்களும் வரும். மேலும் இதுவரை மாணவர்களுக்கு மாநில வினாத்தாள் மற்றும் வினா வங்கி எதுவும் அரசால் வழங்கப்படவில்லை.

ஆகவே, மாணவர்கள் பொதுத்தேர்வுக்குத் தயாராவதற்கு குறைந்த பட்சம் 4 மாதங்களாவது அவகாசம் வழங்கி சுலபமான வழிகளில், குறைந்தபட்ச வினாக்களுடன் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகாத வண்ணம் பொதுத் தேர்வை ஜூன், ஜூலை மாதங்களில் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அடுத்து அறிவிக்கப்பட உள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வையும், மாணவர்களுக்கு போதிய கால அவகாசம் கொடுத்து ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் நடத்த வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.